தற்போதைய model (மாதிரி) பிரிவு :
![](/storage/thumbnails/academy/salah/compressed/prayers.jpg)
பாடம் ஜமாஅத் தொழுகை (கூட்டுத் தொழுகை)
ஐவேளைத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுமாறு அல்லாஹ் ஆண்களுக்குப் பணித்துள்ளான். அதன் சிறப்பில் மகத்தான கூலி இருப்பதாக ஆதாரங்கள் உள்ளன. நபியவர்கள் கூறினார்கள் : "கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறப்பானதாகும்". (புஹாரி 645, முஸ்லிம் 650).
கூட்டுத் தொழுகையின் குறைந்தபட்ச எண்ணிக்கை தொழுகை நடத்துபவர் (இமாம்), பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) அடங்கலாக இருவர் மாத்திரமே. சனத்தொகை அதிகரிக்குமளவு அல்லாஹ்விற்கு அது மிக விருப்பமானதாகும்.
![](/storage/academy/salah/prayer10.jpg)
பின்பற்றித் தொழுவதன் அர்த்தம்
பின்பற்றித் தொழுபவர் தனது தொழுகையை இமாமுடைய தொழுகையுடன் இணைத்து, ருகூஃ, ஸுஜூதில் அவரைப் பின்தொடர்தல், அவரது ஓதலை செவிமடுத்தல், அவரை முந்தாமலும், அவருக்கு மாற்றம் செய்யாமலும் இமாம் ஒரு செயலைச் செய்ததுடன் தாமதமின்றி அச்செயலைச் செய்தல் ஆகியனவே பின்பற்றித் தொழுவதன் அர்த்தமாகும்.
இமாமைப் பின்தொடர்தல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக இமாம் வைக்கப்பட்டிருப்பதெல்லாம் அவர் பின்பற்றப்படுவதற்காகவே, எனவே அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் தக்பீர் கூறும் வரை நீங்கள் கூற வேண்டாம். அவர் ருகூஃ செய்தால் நீங்களும் செய்யுங்கள். அவர் ருகூஃ செய்யாமல் நீங்கள் ருகூஃ செய்ய வேண்டாம். அவர் "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" எனக் கூறினால் நீங்கள் "ரப்பனா வலகல் ஹம்து" எனக் கூறுங்கள். அவர் ஸுஜூத் செய்தால் நீங்களும் செய்யுங்கள். அவர் ஸுஜூத் செய்யாமல் நீங்கள் ஸுஜூத் செய்ய வேண்டாம்". (புஹாரி 688, முஸ்லிம் 414, அபூதாவூத் 603).
அல்குர்ஆனை சிறந்த முறையில் மனனமிட்டுள்ள திறமையாக ஓதக்கூடியவரே இமாமத்திற்கு மிகத் தகுதியானவராவார். அதன் பின் அடுத்தடுத்த தகுதிகளுக்கேற்ப முன்நிறுத்தப்படுவர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒரு சமூகத்தில் திறமையாக அல்குர்ஆன் ஓதக் கூடியவரே அவர்களுக்கு இமாமத் செய்யட்டும். அல்குர்ஆன் விடயத்தில் அவர்கள் சமதரத்தில் இருந்தால் நபிமொழிகளை அதிகம் அறிந்துள்ளவர் செயற்படட்டும்". (முஸ்லிம் 673).
![](/storage/academy/salah/prayer11.jpg)
இமாம் சற்று முன்னால் நிற்க வேண்டும். அவருக்குப் பின்னால் மஃமூம்கள் அணியணியாக சேர்ந்து நிற்க வேண்டும். முதல் வரிசை பூரணமானதன் பின் அடுத்தடுத்த வரிசைகளைப் பூரணப்படுத்த வேண்டும். மஃமூமாக ஒருவர் மாத்திரம் இருந்தால் அவர் இமாமின் வலது புறத்தில் நிற்க வேண்டும்.
![](/storage/academy/salah/prayers.jpg)
இமாமுடன் முழுமையாகத் தொழக் கிடைக்காத நிலையில் ஒருவர் தாமதமாக வந்து சேர்ந்தால் இமாமுடன் சேர்ந்து ஸலாம் கூறும் வரை தொழ வேண்டும். பின்பு அவருக்கு விடுப்பட்ட ரக்அத்களைப் பூரணப்படுத்த வேண்டும். இமாமுடன் அவர் தொழுத பகுதி அவருடைய தொழுகையின் ஆரம்பப் பகுதியாகக் கணிக்கப்படும். அதன் பின் தொழக் கூடியதுதான் அந்த மஃமூமின் தொழுகையின் இறுதிப் பகுதியாகும்.
![](/storage/academy/salah/anak-masbuk.jpg)
தொழுகையை ரக்அத்களைக் கொண்டே கணிக்கின்றோம். இமாம் ருகூஃவிலிருக்கும் போது வந்த சேர்ந்த ஒருவர் இமாமுடன் அந்த ரக்அத்தை அடைந்தவிட்டவராவார். ருகூஃ தவறியவர் இமாமுடன் தொழுகையில் சேர வேண்டும். எனினும் விடுபட்ட அந்த ரக்அத்தின் ஏனைய சொல், செயல்கள் அந்த ரக்அத்தினுடையதாகக் கணிக்கப்பட மாட்டாது.
![](/storage/academy/salah/1374400758_shutterstock_106529405.jpg)
இமாமுடன் ஆரம்பத்திலிருந்தே தொழத் தவறியவர்களுக்கான சில உதாரணங்கள்
பஜ்ரு தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் இமாமுடன் சேர்ந்தவர் இமாம் ஸலாம் கூறிய பின் எஞ்சிய ஒரு ரக்அத்தையும் பூரணப்படுத்த எழ வேண்டும். அதனை முடிக்காமல் ஸலாம் கூறலாகாது. ஏனெனில் பஜ்ரு தொழுகை இரு ரக்அத்களைக் கொண்டது. இவர் ஒரு ரக்அத்தை மாத்திரமே அடைந்து கொண்டார்.
மஃரிப் தொழுகையின் இறுதி அமர்வில் இமாமுடன் இணைந்த ஒருவர் ஸலாம் கூறிய பின் மூன்று ரக்அத்களையும் பரிபூரணமாகத் தொழ வேண்டும். ஏனெனில் அவர் இறுதி அமர்விலேயே இமாமுடன் இணைந்தார். இமாமுடன் குறைந்த பட்சம் ருகூஃவில் இணைவதன் மூலமே ஒரு ரக்அத்தை அடைந்து கொள்ள முடியும்.
ளுஹர்த் தொழுகையின் மூன்றாவது ரக்அத்தின் ருகூஃவில் ஒருவர் வந்து சேர்ந்தால் அவர் இமாமுடன் இரண்டு ரக்அத்களை அடைந்து கொண்டவராவார். இமாமுடன் தொழும் அவ்விரு ரக்அத்களும் அந்த மஃமூமிற்கு ளுஹரின் முதலிரு ரக்அத்களாகும். இமாம் ஸலாம் கூறியதும் எழுந்து மீதமுள்ள மூன்றாம், நான்காம் ரக்அத்களைப் பூரணப்படுத்த வேண்டும். ஏனெனில் ளுஹர்த் தொழுகை நான்கு ரக்அத்களைக் கொண்டதாகும்.