கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் கடன்

இஸ்லாத்தில் கடன் என்பதன் அர்த்தம், அது பற்றிய சில மார்க்க சட்டங்களை இப்பாடத்தில் அறிவோம்.

  • கடன் என்பதன் அர்த்தம், அதன் சட்டம், நிறைவேறுவதற்கான நிபந்தனைகளை அறிதல்.
  • கடனைத் திருப்பிச் செலுத்தும் போது கடனாளியின் நிலைகளை அறிதல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

அல்லாஹ் தனது நீதி, மதிநுட்பத்தின் அடிப்படையில் மக்களிடையே வாழ்வாதாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளான். எனவே அவர்களில் செல்வந்தர், வறியவர், தன்னிறைவுள்ளவர், தேவையுடையவர் எனப் பல வகையினர் உள்ளனர். தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் துணை புரியும் வகையில் மக்கள் தமக்கிடையே கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது வழமையாகும். மேலும் அல்லாஹ்வின் ஷரீஅத் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையானதாகும். கடன்கள் தொடர்பான பல சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அல்குர்ஆனின் மிக நீண்ட வசனத்தை கடனுக்காகக் குறிப்பாக்கியுள்ளான். ஆயதுத் தைன் என அழைக்கப்படும் ஸூரா பகராவின் 282ம் வசனமே அதுவாகும்.

கடன்

இது பரிவின் அடிப்படையில் ஒருவருக்கு பயனடைந்து, பிரதியைத் திருப்பித் தருவதற்காக பணத்தைக் கொடுத்தலைக் குறிக்கின்றது,

கடன் கொடுக்கல் வாங்கலின் சட்டம்

கடன் கொடுப்பது ஸுன்னத்தாகும், எடுப்பது ஆகுமாக்கப்பட்டதாகும். கடன் எடுப்பது வெறுக்கப்பட்ட கையேந்தலில்லை. ஏனெனில் இவர் தனது தேவைகளை நிவர்த்தி செய்து விட்டு மீண்டும் திருப்பிக் கொடுக்கும் நோக்கிலேயே பணத்தைப் பெறுகின்றார்.

கடன் வழங்குபவருக்கு அதன் மூலம் பயனேதும் கொண்டு வருமாக இருந்தால் அது தடுக்கப்பட்ட வட்டி முறையாகும். உதாரணமாக திருப்பித் தரும்போது மேலதிகமாகத் தர வேண்டும் என்ற அடிப்படையில் கடன் கொடுப்பதைப் போன்று. அதே போன்று கடனுடன் வியாபாரம் போன்ற வேறு ஒப்பந்தங்கள் இணைக்கப்பட்டாலும் அதுவும் கூடாது. ஏனெனில் கடனும் வியாபாரமும் ஒன்று சேர்வது கூடாது.

கடன் சட்டபூர்வமாவதற்கான காரணம்

மக்களுக்கு இரக்கம் காட்டுதல், அவர்களின் விடயங்களை இலகுபடுத்தல், கஷ்டங்களை நீக்குதல், தேவையுடையோருக்கு உதவுதல் போன்றன அழகிய கடன் திட்டத்தில் இருப்பதால் இஸ்லாம் அதனை அனுமதித்துள்ளது. அது கடன் கொடுக்கும் ஒரு முஸ்லிம் தனது இரட்சகனை நெருங்கும் வணக்கமாகும். தேவை கடுமையாக இருக்குமளவு நன்மையும் பெரிதாக இருக்கும்.

கடனை- சிறு தொகையோ, பெருந்தொகையோ- எழுதி சாட்சியங்கள் வைப்பதன் மூலம் அதனை ஆவணப்படுத்துவது விரும்பத்தக்கதாகும். கடனைப் பாதுகாப்பதற்காகவும், கடன் கொடுத்தவர் மன அமைதி அடைவதற்காகவும், கடன் வாங்கியவரின் மரணம், அல்லது அவரது மறதி, மறுப்பு போன்றவற்றால் கடன் கொடுத்தவர் தனது உரிமையை இழக்காதிருக்க கடனின் அளவு, வகை, தவணை போன்றவற்றை எழுதிக்கொள்ள வேண்டும். கடன் பற்றிய வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது". (பகரா : 282). மேலும் அதே வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான் : "தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்". (பகரா : 282).

கடன் செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

١
ஈஜாப் - கபூல், அல்லது அது போன்ற ஒப்பந்த வார்த்தைகள் மூலம் நிறைவேறுதல்.
٢
கடன் வழங்குபவர் பெறுபவர் இருவரும் பருவமடைந்த, சித்தசுவாதீனமுள்ள, பொறுப்பணர்வுள்ள, பலவந்தமின்றி சுயவிருப்பத்துடன், தர்மம் செய்யத் தகுதியுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
٣
கடன் பணம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
٤
கடன் தொகை அறியப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

பிறரிடமிருந்து கடனைப் பெற்றவர் அதனைத் திருப்பிச் செலுத்த உறுதிகொள்ள வேண்டும். திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் நோக்கில் மக்களின் சொத்துக்களை எடுப்பது ஹராமாகும். மாறாக தவணை வரும் போது திருப்பிச் செலுத்துவது கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்." (புஹாரி 2387).

கடன் பெற்றவருக்கு பல நிலைகள் உள்ளன

١
அவரிடம் அறவே ஒன்றுமில்லாமல் இருத்தல், இவருடைய வறுமை காரணமாக எதிர்பார்ரத்திருப்பது அவசியமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்". (பகரா : 280).
٢
அவருடைய சொத்துக்கள் பெற்ற கடனை விட மேலதிகமாக இருத்தல், இவர் கடனைத் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். வசதியுள்ள கடனாளி தவணை வந்தும் திருப்பிச் செலுத்துவதைப் பிற்போடுவது ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "வசதியுள்ளவன் கடனை இழுத்தடிப்பது அநியாயமாகும்." (புஹாரி 2287, முஸ்லிம் 1564).
٣
அவருடைய சொத்துக்கள் பெற்ற கடனின் அளவு இருத்தல், இவர் கடனைத் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும்.
٤
பெற்ற கடனை விட சொத்துக்கள் குறைவாக இருத்தல், இவர் வங்குரோத்து நிலையிலுள்ளவர் ஆவார். கடன் வழங்கியோரின் வேண்டுதலுக்கிணங்க இவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டு, அவர்களுடைய கடன் தொகைக்கேற்ப விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.

வங்கிகளில் பணம் வைப்பிலிடுவதின் சட்டம்

١
இஸ்லாமிய சட்ட விதிகளுக்கிணங்க செயல்படும் இஸ்லாமிய நிதி நிறுவனங்களில் வைப்பிலிடுவது அனுமதிக்கப்பட்டதாகும்.
٢
வட்டியுடன் தொடர்பான வங்கிகளில் பணத்தை வைப்பிலிடுவதற்கு இரு நிலைகள் உள்ளன. 1. மேலதிக வருமானம் பெறுவதற்காக வங்கியில் வைப்பிலிடுதல், இதுவே தடுக்கப்பட்ட வட்டி முறையிலான கடனாகும். இவ்வாறு வைப்பிலட முடியாது.2. மேலதிக வருமானமின்றி நடைமுறைக் கணக்கில் வைப்பிலிடல். இதுவும் கூடாது. ஏனெனில் வட்டியுடனான பரிவர்த்தனைகளில் பணத்தைப் பயன்படுத்த வங்கிக்கு உதவுவதாக இது அமைகின்றது. உண்மையான நிர்ப்பந்த நிலை இதிலிருந்து விதிவிலக்களிக்கப்படுகின்றது. தனது பணம் தொலையும் என்றோ, திருடப்படும் என்றோ அஞ்சி, அதனைப் பாதுகாப்பதற்கு வேறு வழிகளும் இல்லாத பட்சத்தில் நிர்ப்பந்த அடிப்படையில் வைப்பிலிடலாம்.

குறிப்பிட்ட நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் தாமதித்த காரணத்திற்காக வங்கியால் தண்டப்பணம் அறவிட முடியாது, இது வட்டியாகும், இந்நிபந்தனையுடன் கடன் பெறுவதும் கூடாது. தண்டப்பணமின்றி உரிய நேரத்தில் தன்னால் செலுத்த முடியுமென கடன்பெறுபவர் நினைத்தாலும் இது வட்டியைக் கட்டாயப்படுத்தும் ஒரு ஒப்பந்தம் என்பதால் இது கூடாது.

கடனைத் திருப்பிச் செலுத்தும் போது உபகாரம் புரிதல்

ஏற்கனவே நிபந்தனையிடப்படாத பட்சத்தில் கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்தும் போது உபகாரம் புரிவது ஸுன்னத்தாகும், இது அழகிய பிரதியுபகாரமாகவும், உயர்ந்த பண்பாகவும் உள்ளது, ஏற்கனவே நிபந்தனையிடப்பட்டிருந்தால் அது தடுக்கப்பட்ட வட்டியாகும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்