தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னா
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
நபி (ஸல்) அவர்களின் என்பது அல்லாஹ் தனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளிய வஹீயாகும். அல்குர்ஆனுடன் இணைந்து இதுவும் இஸ்லாத்தின் பிரதான அடிப்படையாகவும், மூலாதாரமாகவும் உள்ளது. இரு சாட்சியங்கள் வேறு பிரிக்க முடியாமல் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது போன்று சட்டவாக்கத்தில் இவ்விரண்டும் ஒன்றோடொன்று கைகோர்த்தவையாகும். ஸுன்னாவை விசுவாசிக்காதவன் அல்குர்ஆனையும் விசுவாசிக்காதவனாவான்.
ஸுன்னாவின் வரைவிலக்கணம்
ஸுன்னா என்பது நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் வந்துள்ள அன்னாரது சொல், செயல், அங்கிகாரம், தோற்ற அமைப்பு, குணநலன்கள் ஆகியனவாகும்.
நபிகளாரின் ஸுன்னாவின் நிலை
இஸ்லாத்தில் ஸுன்னாவிற்கு மகத்தானதோர் இடமுண்டு. பின்வருவன அதன் இடம், மற்றும் நிலையை தெளிவுபடுத்துகின்றன :
1. சட்டவாக்கத்தில் இதுவே இரண்டாவது மூலாதாரமாகும்.
அல்குர்ஆனுக்கு அடுத்து சட்டவாக்கத்தில் ஸுன்னாவே இரண்டாவது மூலாதாரமாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "அறிந்து கொள்ளுங்கள், எனக்கு அல்குர்ஆனும் அது போன்ற ஒன்றும் அதனுடன் வழங்கப்பட்டுள்ளது. அறிந்து கொள்ளுங்கள், எனக்கு அல்குர்ஆனும் அது போன்ற ஒன்றும் அதனுடன் வழங்கப்பட்டுள்ளது. அறிந்து கொள்ளுங்கள், "நீங்கள் குர்ஆனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், அதில் ஹலாலாகக் கண்டுகொண்டவற்றை ஹலாலாக்குங்கள், அதில் ஹராமாகக் கண்டுகொண்டவற்றை ஹராமாக்குங்கள்" என்று ஒரு மனிதன் தனது சோபாவில் வயிறு நிரம்பிய நிலையில் சாய்ந்தவாறு கூறப்போகின்றான்". (அஹ்மத் 17174).
2. இதுவும் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியாகும்.
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவும் அல்லாஹ் அன்னாருக்கு அருளிய வஹியாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்". (நஜ்ம் : 3-5).
3. இது அல்குர்ஆனைத் தெளிவுபடுத்தக் கூடியதாகும்.
ஸுன்னாவிலே அல்குர்ஆனுக்கான தெளிவுரை உள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்". (நஹல் : 44).
பல விடயங்களில் அல்குர்ஆன் வசனங்கள் பொதுப்படையாக, சுருக்கமாகவே வந்துள்ளன. அவற்றை நபி (ஸல்) அவர்கள் தனது வார்த்தையாலோ, செயன்முறை மூலமோ விவரித்துள்ளார்கள். உதாரணமாக "(முஃமின்களே!) நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஸகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்". (நூர் : 56) என்ற இறைவசனத்தில் தொழுகை நிலைநாட்டுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் பொதுப்படையாகவே வந்துள்ளது. அதன் விபரங்கள் ஸுன்னாவில் இடம்பெற்றுள்ளது. ஐவேளைத் தொழுகை நேரங்கள், அதன் இதர சட்டங்களை அது தெளிவுபடுத்தியுள்ளது. அவ்வாறே ஸகாத்தின் சட்டங்களையும் விவரித்துள்ளது.
ஸுன்னாவும் அல்லாஹ் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுள்ள மார்க்கத்தின் ஒரு பகுதியாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இம்மார்க்கத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்". (ஹிஜ்ர் : 9). இங்கு மார்க்கம் என்பது குர்ஆன், ஸுன்னா அடங்கலாக அல்லாஹ் தனது நபி ஸல் அவர்களுக்கு இறக்கிய அனைத்தையும் உள்ளடக்கக் கூடியது.
ஸுன்னாவிற்கென்றே சில அறிஞர்களை அல்லாஹ் தயார்படுத்தியது அதனைப் பாதுகாக்கும் முறைகளில் ஒன்றாகும். அவர்கள் ஸுன்னாவை ஒன்று சேர்த்து, நூலுருப்படுத்துவதிலும், அதன் அறிவிப்புக்களைப் பாதுகாப்பதற்கான பொது விதிகளை வரையறுப்பதிலும் பாரிய பங்களிப்பாற்றியுள்ளனர். அதில் நுழைந்த பொய், சந்தேகத்திற்கிடமானவை, தவறுகளை வேறுபிரித்தனர். அவர்கள் அதை மிகவும் துல்லியமாக அமைத்தனர், மேலும் அவர்கள் அதை மிகவும் கடுமையாக பாதுகாத்தனர். அதனை அறிவிப்பவர்களைத் தீர ஆராய்ந்து, தூய்மையான அறிவிப்புக்களைத் தரம் பிரித்தனர்.
அல்லாஹ் தனது நபியின் ஸுன்னாவைப் பாதுகாக்க அவன் பயன்படுத்திய இந்த அறிவிப்பாளர்கள், அறிஞர்கள் வாயிலாகவே பெறுப்பேற்றுள்ளான்.
புனித குர்ஆனுக்கு அடுத்து ஸுன்னாவே இரண்டாவது மூலாதாரமாகும். மேலும் இறைவேதத்தையும் ஸுன்னாவையும் அருகருகே எடுத்துக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மார்க்கம் முழுமையடையாது.
மார்க்க சட்டங்களை ஆய்வு செய்து எடுப்பதில் ஸுன்னா பிரதான மூலாதாரமாகும். அடிப்படைக் கொள்கை சார்ந்த, மற்றும் மார்க்க சட்டதிட்டங்கள் சார்ந்த அனைத்திலும் அதனை வைத்து அமல் செய்வது அவசியமாகும்.
சில வேளை ஸுன்னா அல்குர்ஆனின் சட்டங்களைத் தெளிவுபடுத்த வரும், இன்னும் சிலவேளை தனித்துவமாக மார்க்க சட்டங்களைக் கொண்டுவரும். ஹலாலாக்குதல், ஹராமாக்குதல் விடயத்தில் ஸுன்னாவும் அல்குர்ஆனைப் போன்றாகும்.
ஸுன்னா ஆதாரமென்பதையும், இஸ்லாமிய சட்டத்துறையில் அதற்குரிய இடத்தையும் உறுதிப்படுத்தி பல அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளன. ஸுன்னாவைப் பற்றிப்பிடுத்து, அதனை ஆதாரமாகக் கொள்வதையும், நபி ஸல் அவர்களுக்குக் கட்டுப்படுவதையும் ஏவி பல அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்". (ஹஷ்ர் : 7).
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "எனது வார்த்தை கூறப்படும் போது "எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வின் வேதமுள்ளது, அதில் ஹலாலாகக் கண்டுகொண்டவற்றை ஹலாலாக்குவோம், அதில் ஹராமாகக் கண்டுகொண்டவற்றை ஹராமாக்குவோம்" என்று ஒரு மனிதன் தனது சோபாவில் சாய்ந்தவாறு கூறப்போகின்றான். அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் தூதர் ஹராமாக்கியதும் அல்லாஹ் ஹராமாக்கியது போன்றுதான்". (இப்னு மாஜா 12).
நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், நிலைகளில் அன்னாருக்குக் கட்டுப்பட்டு, பின்பற்றுவதை அல்லாஹ் அடியார்களுக்கு கடமையாக்கியுள்ளான். அவன் கூறுகின்றான் : "(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்". (ஆல இம்ரான் : 31). மேலும் கூறுகின்றான் : "நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு (நபியாகிய) அவர்களைப் பின்பற்றுங்கள்". (அஃராப் : 158).
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இர்பாழ் பின் ஸாரியா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "நீங்கள் எனது வழி முறையையும், எனக்குப் பின்னால் (ஆளும்) நேர்வழிபெற்ற கலீபாக்களினது வழிமுறையையும் பின்பற்றுங்கள். அவைகளை உங்கள் கடைவாய்ப் பற்களால் பற்றிப்பிடியுங்கள். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப் பட்டவற்றை உங்களுக்கு நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் நூதனங்கள் அனைத்தும் வழிகேடாகும்". (அபூதாவூத் 4607).
பின்பற்றுதல் என்பது நபி (ஸல்) அவர்கள் கூறியதை, செய்ததைப் பற்றிப்பிடித்தல், ஏவல்களை எடுத்து நடப்பதிலும், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதிலும், மார்க்கத்தை அமுல்படுத்தி, செயல்படுத்துவதிலும் அன்னார் சென்ற பாதையில் வழிமுறையில் செல்லுதல் ஆகியனவாகும்.
கடமையானவற்றில் பின்பற்றுதல் கடமையாகும், ஸுன்னத்தானவற்றில் பின்பற்றுதல் ஸுன்னத்தாகும்.
ஸுன்னாவைப் பின்பற்றுவதற்குப் பல சிறப்புக்களும் பயன்களும் உள்ளன. அவற்றுள் சில :
நபி (ஸல்) அவர்கள் நரகவாதிகள் என எச்சரித்த பிரிவுகளைப் பின்பற்றுவதிலிருந்து பாதுகாப்பு ஸுன்னாவைப் பின்பற்றி, அதனைப் பற்றிப்பிடிப்பதிலேயே உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "இஸ்ரவேலர்களுக்குள் வந்த அனைத்தும் அச்சொட்டாக எனது சமூகத்திற்குள்ளும் நிச்சயமாக வரும். எந்தளவுக்கெனில் அவர்களில் ஒருவன் தனது தாயாருடன் பகிரங்கமாக விபச்சாரத்தில் ஈடுபாட்டால் அதனையும் செய்யக் கூடியவன் எனது சமூகத்தில் இருப்பான். இஸ்ரவேலர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்து சென்றனர். நிச்சயமாக எனது சமூகம் 73 கூட்டங்களாகப் பிரிவர். ஒரு கூட்டத்தைத் தவிர ஏனைய அனைவரும் நரகில் இருப்பர்". அப்போது தோழர்கள் "அந்த ஒரு கூட்டம் யார்?" என வினவ "நானும் எனது தோழர்களும் இருக்கின்ற கொள்கையில் இருப்போராகும்" என பதிலளித்தார்கள். (திர்மிதி 2641).
ஸுன்னாவைப் பற்றிப் பிடிப்பதில் தான் நேர்வழிப் பெறுவதும், வழிகேட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் தங்கியுள்ளன. அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு (நபியாகிய) அவர்களைப் பின்பற்றுங்கள்". (அஃராப் : 158). நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "நான் உங்களுக்கு இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அதன்பின் நீங்கள் வழிதவறிச் செல்ல மாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதமும், எனது ஸுன்னாவுமாகும்". (ஹாகிம் 319).
நற்செயல்கள் ஏற்கப்படுவதும் ஸுன்னாவுக்கு உடன்படுவதிலேயே தங்கியுள்ளது. எனவே அடியான் செய்யும் செயல் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவிற்கு நேர்பட்டிருப்பது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றொ யார் செய்கின்றாரோ அது தட்டப்பட்டதாகும்". (முஸ்லிம் 1718).
ஸுன்னாவைப் பின்பற்றுவோரே நபி (ஸல்) அவர்களைச் சார்ந்தவர்களாகும். ஸுன்னாவை விட்டும் தூரமாகியோர் நபியவர்களை விட்டும் தூரமாகியோராகும். அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறுகின்றார்கள் : நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். (புஹாரி 5063).
ஸுன்னாவைப் பற்றிப்பிடிப்பதில் தான் சோதனைகள், நோவினை தரும் வேதனைகளிலிருந்து பாதுகாப்புள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்". (நூர் : 63).
ஸுன்னாவைப் பின்பற்றி, அதனைக் கடைபிடிப்பதால் தான் ஈருலக வெற்றியும் சுபீட்சமும் பெற முடியும். அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்". (நூர் : 53).
اختر مستوى الشرح المناسب لك
يحتوي الدرس الآن على طبقات اختيارية تساعدك على المراجعة السريعة أو التعمق دون مغادرة الدرس.
- الملخص: نظرة سريعة في نحو دقيقة.
- الأساسي: محتوى الدرس الأصلي وهو المسار المعتمد للتقدم.
- المتعمق: تفاصيل إضافية اختيارية عند توفرها.
تقدمك وإكمال الدرس يعتمدان دائما على صفحات المستوى الأساسي.